Wednesday, December 14, 2011

திப்பு சுல்தான் ஆட்சியிலும் .............

கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.
ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல். மடல் எண். 42 : (1760 - 1761)
நீங்கள் பாலாஜி பண்டா அவர்களிடம் கொடுத்தனுப்பிய மடல் கிடைத்தது; மகிழ்ச்சி.
நீங்கள் பூனா செல்லும் பயணத்திற்காக ஒரு யானை, அய்ந்து குதிரைகள், ஒரு பல்லக்கு அய்ந்து ஒட்டகங்கள். அனுப்பி உள்ளேன். சிருங்கேரி, சாரதா தேவிக்காக ஒரு பட்டுப்புடவையும், உங்களுக்கு இரண்டு சால்வைகளும், இரண்டு வேட்டிகளும் அனுப்பி உள்ளேன். உங்கள் பயணச் செலவிற்காகப் பத்தாயிரத்து அய்ந்நூறு ரூபாய்களும் பாலாஜிபண்டா, வெங்கடேச ராமையா ஆகியோரிடம் கொடுத்தனுப்பி உள்ளேன். பெற்றுக்கொண்டு தகவல் தெரிவிக்கவும் உங்கள் பயணம் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன்.
இதுபோன்று மேலும் 3 மடல்களை மடல் எண். 43, 44, 45 ஐதர்அலி பொருள் கொடை கொடுத்தது தொடர்பாகச் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு எழுதியுள்ளார்.
திப்புசுல்தான் தன்னுடைய அமைச்சரவைகளில் முதன்மையாக உபயதுல்லா என்ற இசுலாமியருக்கும், கோவிந்த பண்டிட் என்ற பார்ப்பனருக்கும் சிறப்பு இடம் கொடுத்திருந்தார் - குரான் மற்றும் இந்து சாஸ்திர விதிகளைக் கூறுவதற்காக.
1791இல் திப்புசுல்தானை பேரில் மராட்டியர்கள் ஒரு பக்கமும், ஆங்கிலேயர்கள் ஒரு பக்கமும். ஐதராபாத் நிசாம் ஒரு பக்கமுமாக மும்முனைத் தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில் இரகுநாதன் பட்டவர்த்தன் என்பவர் தலைமையில் மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைத் தாக்கி அதில் இருந்த சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து சிருங்கேரி சங்கராச்சாரிக்குத் திப்பு மடல் எழுதினார்.
மடல் எண். 47 இல், மராட்டியர்கள் செய்த அக்கிரமத்தை என்னால் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. மடத்திலிருந்த சில பார்ப்பனர்களையும் அவர்கள் கொன்றுள்ளனர். நீங்களும் மடத்தை விட்டு நான்கு சீடர்களுடன் வெளியேறிவிட்டீர்கள். சூரியன், சந்திரன் இருக்கும் வரை இந்த மடம் நிலைத்திருக்க நான் வழி வகைகளைச் செய்கிறேன் என்று கூறிச் சிதைந்து போன சிருங்கேரி சாரதா மடத்தைச் சீரமைக்க 200 ராகாட்டிஸ் (அப்போதைய ரூபாய்) பொருளும், 200 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு மேற்கொண்டு, தேவையெனில் நகர பரிபாவனத்தில் கொடுக்கும்படி உத்தரவிடுகிறேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 48 இல்,
சிருங்கேரி சங்கராச்சாரிக்கு, உங்களுக்காக ஒரு பல்லக்கு அனுப்பி உள்ளேன். நகர ஆட்சியிடம் உங்களுக்கு வேண்டப்படும் பொருள்களைக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று எழுதியுள்ளார்.
மடல் எண் 49 இல், நரசிம்மையா மூலம் நீங்கள் அனுப்பிய மடல் பார்த்தேன். உங்களுக்கு மேலும் ஒரு யானையும், ஒரு பல்லக்கும் 200 (ராகாடிஸ்) பணமும் கொடுத்தனுப்பி உள்ளேன். சாரதாம்பாளுக்காக விலை உயர்ந்த பட்டுப் புடவையை அனுப்பி உள்ளேன். நாட்டின் எதிரிகளை அழிக்க ஜபம் செய்ய வேண்டுகிறேன்.
மடல் எண் 50 இல், ஸ்ரீ சச்சினாந்த சுவாமிஜி உங்கள் மடல் கண்டேன், உங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு நெல் கொடுக்கும்படி, உத்தரவிட்டுள்ளேன். 400 ராகாடிஸ் (பணம்)மும், ஒரு பல்லக்கும் அனுப்பி உள்ளேன். நாராயணன் மூலம் ஒரு யானையையும் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொண்டு சம்புரோசன பூசையை தொடக்குங்கள். கூடவே ரூ.500/- கருவூல அலுவலர் கொள்ளா மூலம் கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.
மடல் எண் 51 இல், நாட்டின் எதிரிகளை அழிக்க விரைவில் சாத்திரசண்டி ஜபம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 1000 பார்ப்பனர்கள் 40 நாட்கள் தொடர்ந்து ஜபம் செய்யட்டும். அதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் வேண்டுகோள் வைத்தார். சங்கராச்சாரிக்குச் சொல்ல வேண்டுமா? அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே ஏற்பாடு செய்தார். சாத்திர சண்டி ஜபம் நடைபெற்றது. எதிரிகள் அழியவில்லை. ஆனால், பார்ப்பனர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து ஜபம் செய்வித்த திப்புசுல்தான் போரில் மரணம் அடைந்தார்.
திப்புதல்தான் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்திருந்தது. 45,000 முதல் 50,000 பேர் வரை பார்ப்பனர்கள் அரசு பணிகளில் இருந்தனர். அவர்களில் இரண்டுபேர் குற்றம் செய்துவிட்டனர். அந்தக்குற்றம் செய்த இரண்டு பார்ப்பனர்களையும் விடுதலை செய்யும்படி சங்கராச்சாரி திப்பு சுல்தானுக்கு மடல் அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்டு குற்றவாளிப் பார்ப்பனர்களை விடுவித்தார்.
திப்புவின் மடல் எண். 58 இல் சங்கராச்சாரிக்கு எழுதுகிறார்.
என்னுடைய ஆட்சியின் நிருவாகத்தில் 45,000 முதல் 50,000 பேர் பார்ப்பனர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அந்த அதிகாரத்தை இன்று முதல் உங்களுக்கே அளிக்கிறேன். (சங்கராச்சாரிக்கு) நீங்கள் உங்கள் சாத்திரங்களில் கூறியுள்ளபடி அவர்களின் குற்றங்களுக்கு (மதுகுடித்தல், திருடுதல் போன்றவை), தண்டனை அளிக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று எழுதி உள்ளார்.
இப்படிப்பட்ட திப்பு சுல்தானைத் தான் இசுலாமிய மதவெறியர் என்று கூறுகின்றனர் இந்து மத வெறியர்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls